மைத்திரியின் இந்தியப் பயணம் உறுதி – வரும் 15ம் நாள் புதுடெல்லி செல்கிறார்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு வரும் 15ம் நாள் இந்தியா செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகமும், இந்திய வெளிவிவகார அமைச்சும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்தமாதம் 9ம் நாள் சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
புதுடெல்லியில் அவர், இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன், புத்தகயாவுக்கும் திருப்பதிக்கும் சென்று அவர், வழிபாடும் நடத்தவுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் பயணத்தை உறுதிப்படுத்திய இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன்,
இந்தியாவும் சிறிலங்காவும் நெருக்கமான அயல் நாடுகள். எனவே, இருநாடுகளின் தலைவர்களும் சந்திக்கும் போது, இருதரப்பு நலன்களை உள்ளடக்கிய எல்லா விவகாரங்கள் குறித்தும், பேசுவார்கள்.
எமது நிலைப்பாடு குறித்து நாம் பகிர்ந்து கொள்ள விரும்பும் எல்லா விடயங்களையும் எடுத்துக் கூறுவோம்.
பொருளாதார விவகாரங்கள் குறித்தும், சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம் குறித்தும், இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும், அனைத்துலக விவகாரங்கள் குறித்தும், இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடும்.” என்று தெரிவித்துள்ளார்.