சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடாதாம் சீனா
சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவோ, இன்னொரு நாட்டுக்கு எதிராக சிறிலங்காவைப் பயன்படுத்தவோமாட்டது என்று சீனா உறுதியளித்துள்ளது.
சிறிலங்காவுக்கு சிறப்புத் தூதுவராக வந்துள்ள சீன வெளிவிவகார உதவி அமைச்சர் லியூ ஜியான்சாவோ, இதனை இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“சிறிலங்காவின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உதவுவதே, சீனாவின் பிரதான நோக்கம்.
அடுத்தமாதம் சிறிலங்கா அதிபர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் சிறிலங்காவுடன் சீனா தொடர்ந்து பேச்சுக்களை நடத்தும்.
நுரைச்சோலை அனல் மின் நிலைய கட்டுமானத்துக்கு நல்ல தரமுள்ள பொருட்களே பயன்படுத்தப்பட்டன.
எல்லா வெளிநாட்டு அபிவிருத்தித் திட்டங்களிலும் சீனா அனைத்துலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தர நியமங்களைப் பேணி வருகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று சிறிலங்கா வந்த சீன உதவி வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நேற்றும், அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்றும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.