கிழக்கு முதலமைச்சராக ஹபிஸ் நசீர் பதவியேற்பு – அம்பாறையில் கடும் எதிர்ப்பு.
கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஹபிஸ் நசீர் அகமத் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில், இன்று மாலை நடந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ முன்பாக, ஹாபிஸ் நசீர் பதவியைப் பொறுப்பேற்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன், முன்னர் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமையவே, இந்த பதவியேற்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சராக, ஹபிஸ் நசீர் அகமத் நியமிக்கப்பட்டுள்ளதற்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
ஹபிஸ் நசீர் அகமத் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் வலுப் பெற்றுள்ளது.
இதனால், சாய்ந்தமருது பள்ளிவாசலில் இன்று மதியம் தொழுகை முடிந்த பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் ஹக்கீமின் உருவபொம்மையையும் எரிக்க முயன்றபோது. சிறிலங்கா காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே, கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹபிஸ் நசீர் நியமிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.