உச்சநீதிமன்றத்தை நாடும் ஐதேக – அலரி மாளிகையில் குவிந்த ஆதரவாளர்கள்
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தகவல் வெளியானதும், அலரி மாளிகையில் ஐதேக தலைவர்கள் அவசர அவசரமாக ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.
இன்று அதிகாலையிலும் கூட அலரி மாளிகையில் ஐதேக ஆதரவாளர்கள் பெருமளவில் ஒன்று கூடி, சிறிலங்கா அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ், நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லாத நிலையில், சிறிலங்கா அதிபரின் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.