அதிபர் தேர்தலில் இந்தியாவினால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் – மகிந்த ராஜபக்ச
சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் இந்தியாவினால், பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“இந்த தேர்தலின் இறுதி முடிவுகளில் மேற்குலகம் மற்றும் இந்தியாவினால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு செல்வாக்கைச் செலுத்துகிறது.
அத்தகைய தலையீடுகளைச் சமாளிக்கும் வகையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது.
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யாது என்று நம்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.