சிறிலங்கா முப்படையினரை குடும்பத்துடன் கயாவுக்கு அழைத்துச் சென்ற இந்திய விமானப்படை விமானம்
சிறிலங்காவின் முப்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 160 பேர் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம், நேற்று புத்தகயாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 82 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளடங்கியுள்ளனர்.
இந்திய விமானப்படையின சி- 17 போக்குவரத்து விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று இவர்களை ஏற்றிச் சென்றது,
இன்று புத்தகயா மற்றும் கயாவில் உள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி அகடமிக்குச் செல்லும் இவர்கள், நாளை, அதே விமானத்தில் கொழும்பு திரும்புவார்கள்.
இவர்களை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ளது.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று இந்தப் பயணத்துக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை இந்திய இராணுவத்தின், இராஜதந்திர நடவடிக்கையாக கருதப்படுகிறது.