சிறிலங்காவில் இந்திய விமானப்படைத் தளபதி – பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, சிறிலங்காவின் பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ ஐந்து நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தனி ஜெட் விமானத்தில் வந்திறங்கிய அவரை சிறிலங்கா விமானப்படைத் தளபதி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து இன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற இந்திய விமானப்படைத் தளபதி சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில், விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி மற்றும் இராணுவத் தலைமையகத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச உயர்மட்டத் தலைவர்களையும் இந்திய விமானப்படைத் தளபதி சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.