கொழும்பு துறைமுக நகரத்தை உள்ளடக்கிய சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு
கொழும்பு துறைமுக நகரத்தை உள்ளடக்கிய, சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளது. புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டில் அது வெளியிடப்படும் என்றும் நிலஅளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய வரைபடம், கொழும்பில் அமைக்கப்படும் துறைமுக நகரம் உள்ளிட்ட மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று நிலஅளவைப் பணிப்பாளர் உதயகாந்த தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தப்பட்ட வரைபடம், அம்பாந்தோட்டைத் துறைமுக கட்டுமானப் பணிகளின் பின்னரான திருத்தங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை உருவாக்குவதற்காக, சிறிலங்காவின் நிலப்பகுதியில் கடல் நீர் நிரப்பப்பட்டதும், கடற்பகுதியில் மண் நிரப்பப்பட்டு கொழும்பு துறைமுக நகரம் உருவாக்கப்பட்டுள்ளதால், தரைப்பகுதியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதுமான சூழலில் புதிய வரைபடம் இந்த மாற்றங்களை உள்ளக்கியதாக அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.