வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறித்து விசாரிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு
வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறிலங்கா அமைச்சரவை இணைப்பேச்சாளர் தயாசிறி ஜெயசேகர தகவல் வெளியிடுகையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் கண்டன அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அதிபருக்கோ பிரதமருக்கோ எதுவும் தெரியாது.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க கூட இதனை அறிந்திருக்கவில்லை.
இது குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.
அனைத்துலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயற்பாட்டை சிறிலங்கா கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சு கடந்த ஜூலை 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.