அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் – சீனாவுடன் இன்னமும் உடன்பாடு இல்லை.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் விடயத்தில், சீன நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக, சீன நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் பல மாதங்களாகப் பேச்சுக்களை நடத்தி வந்தாலும், இன்னமும் இணக்கம் ஏதும் எட்டப்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டது. எனினும், அதில் ஒப்பமிடுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அது பிற்போடப்பட்டது.
அதற்குப் பின்னர், துறைமுக உடன்பாடு குறித்த பேச்சுக்கள் நடப்பதாகவும், இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது