சிறிலங்காவில் ஆண்டுக்கு 25 ஆயிரம் பேரைப் பலியெடுக்கும் புகையிலை
சிறிலங்காவில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் பேர் புகைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களால் மரணமாவதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலக புகையிலை தவிர்ப்பு நாள் இன்றாகும் (மே 31).
இதனை முன்னிட்டு சிறிலங்காவின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஆண்டு தோறும் புகையிலைப் பொருட்களுக்கான வரியின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு 100 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கிறது. ஆனால் புகையிலையுடன் தொடர்புடைய பொருட்களால் ஏற்படும் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சிறிலங்கா அரசாங்கம் , ஆண்டுக்கு 140 பில்லியன் ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 42 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகிறது.
சிறிலங்காவில் 24 வீதமான ஆண்களும், 2.3 வீதமான பெண்களும் புகைப்பழக்கம் கொண்டவர்களாவர்.
பிராந்தியத்தில் ஆகக்குறைந்த புகைப்பழக்கம் கொண்டவர்களைக் கொண்ட நாடாக பூட்டான் உள்ளது. அதற்கடுத்து, குறைந்தளவு புகைப்பழக்கத்தைக் கொண்டவர்களைக் கொண்ட நாடாக சிறிலங்கா விளங்குகிறது.