ஹிந்தி திரை நட்சத்திரங்களை வைத்து வாக்கு சேகரிக்கிறார் மகிந்த
தனது தேர்தல் வாக்குறுதிகளை மீது நம்பிக்கையிழந்து போயுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஹிந்தி திரை நட்சத்திரங்களை வைத்து, வாக்குகளைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளார்.
ஹிந்தி திரையுலகில் புகழ்பெற்ற நடிகரான சல்மான் கான், மற்றும் முன்னாள் சிறிலங்கா அழகுராணியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னான்டஸ் உள்ளிட்ட ஆறு பேர் இன்று அதிகாலை இந்தியாவில் இருந்து விமானம் மூலம் கொழும்பு வந்தனர்.
இவர்கள் இன்று கொழும்பு, பொறளைப் பகுதியில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் பக்கத்தில் ஆதரவு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியத் திரையுலகினரை வைத்து, தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
சிங்கள மக்கள் மத்தியில், ஹிந்தித் திரை நட்சத்திரங்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அதனைப் பயன்படுத்தி, தனது வாக்கு வங்கியை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.