மைத்திரியை சந்தித்தார் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா – ஆதரவு வழங்க இணக்கம்
சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொது பல சேனாவின் ஆதரவைப் பெற்றால், அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவேன் என்று அறிவித்திருந்தார் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா.
கடந்தவாரம், மகிந்த ராஜபக்சவுக்கு பொது பல சேனா நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்ததையடுத்து, பைசர் முஸ்தபா கடந்த 26ம் நாள் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
இன்று அதிகாலை நாடு திரும்பியவுடன் அவர், எதிரணியின் பொது வேட்பாளரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, எதிரணியுடன் சேர்ந்து இயங்க பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் அறிவிப்பை இன்று அல்லது நாளை பகிரங்கமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.