மைத்திரியுடன் தொடர்பு வைத்திருந்த றோ அதிகாரியின் பதவி பறிபோனது?
சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே, கொழும்பில் இருந்த இந்தியப் புலனாய்வு அதிகாரி புதுடெல்லிக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோவின் கொழும்பு நிலையத் தலைவர் கே.இளங்கோ, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் கொண்டிருந்த தொடர்பினாலேயே, தனது கொழும்பு பதவியை இழக்க நேர்ந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
றோ அதிகாரி கே.இளங்கோவின் சேவைக்காலம் நீடிக்கப்பட்ட போதும், அவரைத் திருப்பி அழைக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் புதுடெல்லியிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, திடீரென அவருக்கு புதுடெல்லிக்கு இடமாற்ற உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் கொழும்பு பயணத்தை அடுத்தே, இந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, மற்றொரு பாதுகாப்புத் தகவல் கூறுகிறது.
எனினும், இதுகுறித்து, கருத்து வெளியிட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.