இராணுவப் புலனாய்வு பிரிவின் சிறப்பு நடவடிக்கைகள் விபரங்களை வெளியிட்டார் சரத் பொன்சேகா
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் நேற்றுமுன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணிநேரம் விசாரணை நடத்தினர்.
பிற்பகல் தொடங்கிய இந்த விசாரணைகள், முன்னிரவு 7.30மணி வரை நீடித்தது.
இதன்போது, இந்தப் படுகொலை தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியதாக தெரிவிக்கப்படுகிறது,
அத்துடன், போரின் இறுதிக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தகவல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டில் செயற்பட்ட இந்தக் குழுவினர், எந்தெந்த முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டு எங்கிருந்து செயற்பட வைக்கப்பட்டனர் என்பது பற்றிய விபரங்களையும் சரத் பொன்சேகா வழங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.