கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு அரசியலமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கொழும்பில் கூடி அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடியது.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், “ புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஏற்கனவே அரசியலமைப்பு திருத்தத்துக்காக நாடாளுமன்ற உப குழுக்களால் முன்வைக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் மற்றும், வழிநடத்தல் குழுவினால் சமர்ப்பிக்கப்படவிருந்த இடைக்கால அறிக்கையில் இடம்பெற முடிவு செய்யப்பட்ட, விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.