இந்தியா செல்கிறார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி – தேஜஸ் போர் விமானங்களை ஆய்வு செய்வார்?
சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பயணத்தின் போது, தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில், உள்ள தண்டிகல் விமானப்படை பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக சிறிலங்கா விமானப்படைத் தளபதி பங்கேற்கவுள்ளார்.
நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், இந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை சிறிலங்கா விமானப்படைத் தளபதி பார்வையிடுவார்.
சிறிலங்கா விமானப்படைத் தளபதியின் இந்தியப் பயணத்தின் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் தேஜஸ் போர் விமானங்களின் திறன் குறித்த மதிப்பீடுகளையும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா விமானப்படைக்கு எட்டு வரையான போர் விமானங்கள் விரைவில் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், சுவீடன் ஆகிய நாடுகளின் தயாரிப்புகளுடன், இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களும், சிறிலங்கா விமானப்படையின் பரிசீலனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.