அம்பாந்தோட்டையில் மீண்டும் சீனா
சீனா தளம் அமைக்கப் போவதாக அனைத்துலக ஊடகங்களால் ஊகம் வெளியிடப்படும், அம்பாந்தோட்டையில், 16 மில்லியன் டொலர் பெறுமதியான மற்றொரு அபிவிருத்தித் திட்டத்தை சீனாவிடம் கையளித்துள்ளது சிறிலங்கா அரசாங்கம்.
ஒருங்கிணைந்த பேருந்து-தொடருந்து முனையத்தை அமைக்கும் திட்டமே தற்போது சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனமே, சிறிலங்கா நாணயப் பெறுமதியில் சுமார் 2 பில்லியன் ரூபா பெறுமதியான இந்த திட்டத்தை நிறைவேற்றவுள்ளது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம், ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் என்று திட்டத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.காமினி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்துக்காக மாநாட்டு மையத்துக்கு அருகே 23 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை மற்றும் தொடருந்துப்பாதைகள், இந்த முனையத்தில் நிறைவடையும் வகையில், நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதுள்ள பேருந்து நிலையமும், வணிகவளாகவும் இந்த இடத்துக்கு மாற்றப்படவுள்ளன.