சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து சீனா- சிறிலங்கா அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சு
சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவது தொடர்பாக, சிறிலங்காவும், சீனாவும் அடுத்தமாதம் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்த உயர்மட்டப் பேச்சுக்களில், சிறிலங்காவின் முக்கியமான உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து சீனாவுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன், சிறிலங்கா வர்த்தக உடன்பாடுகளை செய்து கொண்டிருப்பதுடன், 4000 உற்பத்திப் பொருட்களை தீர்வையின்றி இந்தச் சந்தைகளுக்கு அனுப்பிவருகிறது.
சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், கடந்த ஆண்டு 4 பில்லியன் டொலரை எட்டியுள்ளது. 2014ஆம் ஆண்டு 3.58 பில்லியன் டொலராக இருந்த இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு, 17 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது.