ஐந்து அரசியல் கைதிகள் இன்று நீதிமன்றினால் விடுதலை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து தமிழ் அரசியல் கைதிகள் இன்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைப் புலிகளுடன் இணைந்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்று இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஐந்து அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களி்ல் நான்கு பேர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர். ஒருவர் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களான ஏனைய 15 பேரையும், மார்ச் 9ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் அருணி ஆட்டிக்கல உத்தரவிட்டார்.