மேலும்

ஞானசார தேரருக்கு இன்றும் பிணை இல்லை – ஒரு வாரத்துக்கு மீண்டும் விளக்கமறியல்

Gnanasaraபொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 23ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் நாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரருக்கு, அந்த வழக்கில் பிணை வழங்கப்பட்ட போதிலும், சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று மீண்டும் ஹோமகம நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் அவர் முன்னிறுத்தப்பட்ட போது, எதிர்வரும், 23ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அதேவேளை, ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த மாதம் 27ஆம் நாள், ஹோமகம நீதிமன்றத்துக்கு முன்பாக வன்முறைகளில் ஈடுபட்ட ஆறு பௌத்த பிக்குகளை எதிர்வரும் மார்ச் 6ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராவண பலய அமைப்பின் அமைப்பாளர் சத்ததிஸ்ஸ தேரர், சிங்கள ராவயவின் தலைவர் அக்மீதமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட ஆறு பௌத்த பிக்குகளும், இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் மார்ச் 6ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *