மேலும்

சிறிலங்காவை வழிக்கு கொண்டுவர பொருளாதாரத் தடை அவசியம் – ரிச்சர்ட் ஓட்டாவே

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவர் தலைவர் ரிச்சர்ட் ஓட்டாவே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,

“சிறிலங்காவில் போர் முடிந்த பிறகும் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதனாலேயே பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம், சிறிலங்காவை கவலைக்குரிய ஒரு நாடு என்று கூறியுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக அமைப்பு ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது.

ஆனால் சிறிலங்கா அரசோ தற்போது அனைத்துலக விசாரணைக்கான அழைப்பை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறது.

இந்த விசாரணையை நடத்துபவர்களை சிறிலங்காவுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் இந்த விசாரணையில் சாட்சியம் சொல்பவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் சிறிலங்கா அச்சுறுத்துகிறது.

அதன் விளைவாகவே, சிறிலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால், பொதுவான பொருளாதார சலுகைகள் (ஜிஎஸ்பி) என்ற பட்டியலின் கீழ்,  ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் மற்ற நாடுகளுக்கு கொடுக்கப்படாத பல பொருளாதார சலுகைகள் சிறிலங்காவுக்கு அளிக்கப்படுகிறது.

சிறிலங்காவுக்கு அளிக்கப்படும் அத்தகைய பொருளாதார சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும்.

இதன் மூலம் சிறிலங்காவுக்கு கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.

அதன் மூலம் சிறிலங்கா அரசு தனது கவனத்தை மனித உரிமைகள் விவகாரத்தில் செலுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எங்களின் பரிந்துரை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு கொடுக்கப்படுகிறது.

பிரித்தானிய அரசு மனித உரிமைகள் விவகாரத்தை மிகவும் தீவிரமாக கருதுவதால் தங்களின் இந்த பரிந்துரைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம்.

அதேவேளை இந்தப் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை.

எமது பரிந்துரைகள் எல்லாம் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் என்பதால் இவை நடைமுறைக்கு வருவதற்கு நாட்கள் பிடிக்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த சலுகைகளை திரும்பப் பெறவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் பிரித்தானியா பரப்புரை செய்யவேண்டும்.

சிறிலங்காக்கு எதிராக இதுபோன்ற கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதில் இந்தியாவும், அவுஸ்ரேலியாவும் விருப்பம் காட்டவில்லை.

கொமன்வெல்த் நாடுகள் மத்தியில் இதில் ஒருவித தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

அதேசமயம், இந்தியாவின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த யோசனைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் வைக்கப்பட்டால் அவை தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கிறது.

எங்களின் இந்த முடிவுக்கு காரணம் உலகம் முழுவதும் இருக்கும் பிரித்தானிய தூதரகங்களின் தரவுகள், மற்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை,போன்ற மனித உரிமை அமைப்புக்களே தவிர, புலம்பெயர் தமிழர்களின் தரவுகள் எவையும் எமக்கு கொடுக்கப்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *