யாழ்ப்பாணத்தின் மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு காலமானார்
யாழ்ப்பாணத்தின் மூத்த ஒளிப்பட ஊடகவியலாளரான எஸ்.கதிரவேலு நேற்று, தனது 83ஆவது வயதில் அகால மரணமானார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடக நிறுவனம் ஒன்றின் கிணறில் தவறி வீழ்ந்த இவர், மீட்கப்பட்டு யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மரணமானார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பல்வேறு நாளிதழ்களுக்கும் இவர் ஒளிப்பட ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்தார்.
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகள் பலவற்றை இவர் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்.
அளவெட்டியை சேர்ந்த இவர், தள்ளாத வயதிலும், இறக்கும் வரை ஒளிப்பட ஊடகப் பணியில் துடிப்புடன் ஈடுபட்டிருந்தார்.
அகிம்சைப் போராட்ட காலத்தில், ஒளிப்படம் பிடிக்க முயன்ற போது, காவல்துறையினரின் தாக்குதல் ஒன்றில் ஒரு கண்ணை இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு அவர்களின் இறுதி நிகழ்வு இன்று அளவெட்டியில் இடம்பெறவுள்ளது.