அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக ராவண பலய பிக்குகள் போராட்டம்
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக நேற்று கொழும்பில் போராட்டம் நடத்திய இராவண பலய அமைப்பு, நாகதீப என்பதை நயினாதீவு என்று பெயர் மாற்றம் செய்தால், அனைத்து தமிழ் கிராமங்களின் பெயர்களையும் தாம் அகற்றுவோம் என்றும் எச்சரித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ராவண பலய அமைப்பைச் சேர்ந்த பிக்குகள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து, சிறிலங்கா அதிபரைச் சந்திக்க அவர்கள் அதிபர் செயலகத்துக்குச் சென்றனர். எனினும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர், சிறிலங்கா அதிபரின் செலருடன் நடத்திய பேச்சுக்களின் போது, வரும் 27ஆம் நாள் சிறிலங்கா அதிபரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து ராவண பலய அமைப்பின் பிரதிநிதிகளான இத்தேகந்த பஞ்ஞார தேரர் மற்றும் இத்தேகந்தே சத்ததிஸ்ஸ தேரர் ஆகியோர் கருத்து வெளியிடுகையில்,
“நாகதீப என்ற பெயரை வடக்கு மாகாணசபை நயினாதீவு என்று மாற்றம் செய்தால், நாட்டை இனவாதத்தை நோக்கி இட்டுச் செல்லும்.
அவ்வாறு நாகதீபவின் பெயர் மாற்றப்பட்டால், சிறிலங்காவில் உள்ள அனைத்து தமிழ் பெயர்களையும் மாற்றம் செய்வோம். அதற்கு எம்மிடம் ஆட்பலம் இருக்கின்றது.
சிறைகளில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களை விடுதலை செய்வது நாட்டை மீண்டும் யுத்தத்தை நோக்கி தள்ளும் நடவடிக்கையாகும்.
அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, தவறு செய்திருந்தால் தண்டனை வழங்க வேண்டும்.தவறு செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டால் விடுதலை செய்யலாம்.
கே.பி, கருணா ஆகியோரையும் கைது செய்து, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும்.” என்று குறிப்பிட்டனர்.