புதிய அரசாங்கத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கீடு
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைச் சமர்ப்பித்தார்.
இதன்படி, 2016ஆம் ஆண்டுக்கான அரசாங்க செலவினம், 1941 பில்லியன் ரூபா(1,941,450,438,000) வாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில்,1,314 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவாக இருக்கும், என்றும், 627 பில்லியன் ரூபா முதலீட்டுச் செலவாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு, பாதுகாப்புச் செலவினத்துக்கே அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. 306 பில்லியன் ரூபா (306,657,824,000) வுக்கு அதிகளமான நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படவுள்ளது.
முன்னைய அரசாங்கத்தில் அதிபர் செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி இம்முறை கணிசமாக குறைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு அதிபர் செயலகத்துக்கு, 2.3 பில்லியன் ரூபா (2,392,075,000) மட்டுமே ஒதுக்கப்படும்.2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிபர் செயலகத்துக்கு 9.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
கல்வி அமைச்சுக்கான செலவினம், நான்கு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, 2015ஆம் ஆண்டு, 47.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட கல்வி அமைச்சுக்கு, இம்முறை 185.9 பில்லியன் ரூபா (185,976,030,000) ஒதுக்கீடு செயய்யப்படவுள்ளது.
இதையடுத்து, உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சுக்கே கூடுதலான நிதி ஒதுக்கப்படவுள்ளது. இந்த அமைச்சுக்கு, 237,934,642,000 ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.