பிரகீத் கடத்தல் குறித்து மேஜர் ஜெனரலிடம் விசாரணை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட நம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மேஜர் ஜெனரல், கிரித்தல இராணுவ முகாமுடன் தொடர்புடையவர் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, முன்னதாக, பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட காலத்தில், இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் அருண வன்னியாராச்சியிடம் அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தியுள்ளது.
அதேவேளை, கிரித்தல இராணுவ முகாமுக்குள் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்தவாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.