சிறிலங்கா அதிபரை சந்திக்க நேரம் கோருகிறது தமிழ் அரசுக் கட்சி
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்காக தமிழ் அரசுக் கட்சி, குழுவொன்றை நியமித்திருப்பதாகவும், அந்தக் கடிததத்தில் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்தக் குழுவில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அதிபராக பதவியேற்று இப்போது ஓராண்டு ஆகிறது.
இந்த அழுத்தமான பிரச்சினைக்கான தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், அதிபரால் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஆனால் கடந்த ஆண்டில் தொடர்புடைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பாக அதிபருடன் கலந்துரையாடுவதற்கு ஒரு சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும், தமிழ் அரசுக் கட்சி கோரியுள்ளது.