வரிகள் குறித்து அமெரிக்காவுடன் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வரிகள் தொடர்பாக இன்னமும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
அமெரிக்காவுடன், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இன்னமும் இறுதியான உடன்பாடு ஏற்படவில்லை.
நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களை ஏற்றுக்கொண்டு, சிறிலங்கா இந்தப் பேச்சுவார்த்தைகளை வெளிப்படையாகவும் நடைமுறை ரீதியாகவும் அணுகியுள்ளது.
சிறிலங்காவின் ஏற்றுமதிகளில் 25வீதத்திற்கும் அதிகமானவை – ஆடை ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் அமெரிக்க சந்தைக்கே அனுப்பப்படுகின்றன.
இதனால் இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவு 350,000 க்கும் மேற்பட்ட ஆடைத் தயாரிப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானது.
எந்தவொரு தீர்மானமும் எமது பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒரு வலுவான குழுவை நியமித்து தொடர்ச்சியான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம்.
பரஸ்பர வரிகளை 44 வீதத்தில் இருந்து 20 வீதமாக குறைப்பதற்கு, அமெரிக்கத் தரப்பிலிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது நடந்து கொண்டிருக்கும் பேச்சுக்களின் குறிப்பிடத்தக்க விளைவு என்றும் சிறிலங்கா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.