கனடிய- சிறிலங்கா காவல்துறைகள் இடையே புரிந்துணர்வு உடன்பாடு
றோயல் கனடிய மவுன்ட் காவல்துறையுடன் சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.
சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கும், சந்தேக நபர்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்களுக்கான உதவியைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும், இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த புரிந்துணர்வு உடன்பாட்டிற்கு, சிறிலங்காவின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
அதன்படி, இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டில், கையெழுத்திடுவதற்கு, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.