தேசிய பாதுகாப்புச் சபைக்கான சட்டவரைவை தயாரிக்க அமைச்சரவை அனுமதி
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1999 இல் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு சபையை நிறுவுவதற்கும், புதிதாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மற்றும் தேசிய பாதுகாப்பு சபை செயலகத்தை அமைப்பதற்குமான, சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தின் மூலம், தேசிய பாதுகாப்பு (பொருளாதார, அனைத்துலக விவகாரங்கள், சமூக மற்றும் மத, ஆய்வு மற்றும் பகுப்பாய்வு, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப, மூலோபாய முகாமைத்துவ) குறித்த நிபுணர் குழுக்களை அமைப்பதற்கும் இந்த திட்டம் பரிந்துரைக்கிறது.
ஏப்ரல் 21 தாக்குதல்களை கருத்தில் கொண்டு சிறிலங்கா அதிபரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது,
இதற்குத் தேவையான சட்ட வரைவைத் தயாரிக்குமாறு அரசாங்க சட்ட வரைஞர் அறிவுறுத்தப்படவுள்ளார்.