மேலும்

நாளை நடக்குமா ரணில்- சஜித் சந்திப்பு?

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க, அதிபர் தேர்தலில் போட்டியிட தாம் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசவுடன் தனியாகச் சந்தித்துப் பேசி வேட்பாளர் தொடர்பாக ஒரு முடிவை எடுக்குமாறு ஐதேக தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கமைய நேற்றுக் காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது,

எனினும், முன்னரே அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததால், இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாக சஜித் பிரேமதாச தெரியப்படுத்தியிருந்தார்.

இதையடுத்து, நாளை வரை இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை பெரும்பாலும் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, வேட்பாளர் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை நாளையும் இந்தச் சந்திப்பு நடக்குமா என்பதும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *