மேலும்

‘மொட்டு’ சின்னத்தை கைவிட முடியாது – கோத்தா

மொட்டு சின்னத்தைக் கைவிட்டு, வேறோரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிபந்தனையை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

“சிறிலங்கா பொதுஜன பெரமுன தனது மொட்டு சின்னத்தை மாற்றி, வேறொரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இப்போது வலியுறுத்துகிறார்.

இது கடினமான நிபந்தனை என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த சின்னம், இப்போது, அவர்களின் அடையாளமாக மாறியிருக்கிறது. அதனை கட்சி அடையாளம் கண்டுள்ளது.

மொட்டு சின்னத்துக்கு மாற்றுச் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி கோரிக்கை விடுக்கப்பட்ட போது, முதலில் அதனை ஜி.எல்.பீரிசும், பசில் ராஜபக்சவும் நிராகரித்திருந்தனர்.

கடந்தவாரம் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த விவகாரத்தை தயாசிறி ஜயசேகர மீண்டும் கையில் எடுத்தார்.

எனினும், அதற்கு கோத்தாபய ராஜபக்ச, சின்னத்தை மாற்றுகின்ற  பேச்சுக்கே இடமில்லை என்று நிராகரித்து விட்டார்.

‘பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளாமலேயே அந்தக் கட்சி என்னை அதிபர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

மொட்டு சின்னம் நாடெங்கும் எமது சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனை மாற்ற முடியாது” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *