மேலும்

அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு

வரும் அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இதனை அறிவித்துள்ளார் என கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசநாயக்க தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே, அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று தாம் கடிதம் மூலம் அறிவித்திருப்பதாக சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

எனினும், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்றும் தாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும், போட்டியிடுவது என்பது மாத்திரமே இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு, பொதுஜன பெரமுனவுடன் நடத்தப்படும் பேச்சுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டாதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு தயாசிறி ஜயசேகர,  தான் அவ்வாறு நினைக்கவில்லை என்றும், பேச்சுக்களில் இன்னமும் சரியான முடிவு எடுக்கப்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.

அதேவேளை, அண்மையில் நடந்த சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இதுகுறித்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது என, சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *