மரண தண்டனையை நிறைவேற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்த உத்தரவு
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து செயற்பாடுகளையும், ஒக்ரோபர் 30ஆம் நாள் வரை இடைநிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
எம்.எச்.வி. நவாஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவரது சட்டவாளர் கீகனனேயினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மனுதாரர் சார்பில் சட்டவாளர் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
அவர் தனது வாதத்தில், அரசியமைப்பில் உயிர் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மூத்த துணை சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, அரசியலமைப்பின்16 (2), பிரிவுக்கு அமைய ஒரு மரண தண்டனையை நிறைவேற்றுவது அடிப்படை உரிமைகளை மீறுவதாகாது என்று வாதிட்டார்.
இதையடுத்து, நீதியரசர்கள் குழாம், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் ஒக்ரோபர் 30ஆம் நாள் வரை இடைநிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.
இந்த மனு மீதான விசாரணை ஒக்ரோபர் 30ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.