ரத்தன தேரின் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி மட்டும் பார்வையிட்டார்
கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக, நேற்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரின், உடல் நிலை நன்றாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர்.
இரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டதில், உடலில் நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எனினும், உடல் நிலை நன்றாகவே இருப்பதால், மருத்துவ உதவிகள் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நேற்று மாலை வரை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க மாத்திரம், அத்துரலியே ரத்தன தேரரைச் சந்தித்திருந்தார்.