சிறிலங்கா காவல்துறையினரின் தாக்குதலில் யாழ். ஊடகவியலாளர் காயம்
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொக்குவில் பகுதியில் நேற்றுப் பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் பகுதியில் நேற்று வீடு ஒன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர், அங்கிருந்த பொருட்களையும், வீட்டின் யன்னல்கள், கதவுகளையும் அடித்து உடைத்து விட்டு, வாகனங்கள் மீது பெற்றோல் குண்டுகளை வீசினர்.
இதனால் ஒரு வான் மற்றும் இரண்டு உந்துருளிகள் தீக்கிரையாகின.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நடராஜா குகராஜ் என்ற ஊடகவியலாளர் மீது கோப்பாய் காவல் நிலைய அதிகாரி தாக்குதல் நடத்தினார்.
இதில் காயமடைந்த இரத்தம் வழிந்த நிலையில் அவர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.