கடல்சார் பாதுகாப்புக்காக சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலரை வழங்குகிறது அமெரிக்கா
வங்காள விரிகுடா முனைப்பு திட்டத்தின் கீழ் கடல்சார் பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மற்றும் கடல்சார் விழிப்புணர்வுக்கான ஆதரவாக, சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலர் நிதியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் டி வஜ்டா,தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை பாத் பைன்டர் பவுண்டேசன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“இது தெற்காசியாவில் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணத் திறன்களையும் அதிகரிக்கும்.
இந்தோ- பசிபிக் கூட்டணியின் ஒரு நாடாக, பிராந்தியத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான வாய்ப்பை சிறிலங்கா கொண்டிருக்கிறது.
எமது மூலோபாயத்துக்கு அமைய, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை பாதுகாக்கவும், விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கை வலுப்படுத்தவும், பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகளைக் காணும் கொள்கைகளையும் மதித்து, நாங்கள் சிறிலங்கா போன்ற முக்கிய பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.
இரண்டு நாடுகளின் இராணுவங்களும், இடர்களில் செயற்படுவதல், மனிதாபிமானம், கடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயற்படுகின்றன.
பரஸ்பரம் நன்மை அளிக்கக் கூடிய வகையிலும், சிலங்கா இராணுவத்தை அமைதிக்கால படையாக மாற்றம் செய்ய உதவும் வகையிலும் கூட்டுப் பயிற்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.