மேலும்

உட்கட்சிப் பூசல் – சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூட மைத்திரி உத்தரவு

வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடத்திய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியை இல்லாமல் செய்யும் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிட்டிருந்தார்.

மாவட்ட அமைப்பாளர்களுக்குப் பதிலாக, மாவட்ட முகாமையாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

இந்த முடிவுக்கு மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பியதாச தெரிவித்தார்.

அத்துடன், சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைப்பதற்கும், சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் தொடர்ச்சியாகவே சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடும் உத்தரவை சிறிலங்கா அதிபர் பிறப்பித்துள்ளார் என்று கருதப்படுகிறது.

எனினும், திங்கட்கிழமை நடந்த கூட்டத்துக்கும், கட்சித் தலைமையகத்தை மூடும் முடிவுக்கும் தொடர்பில்லை என்றும், கட்சி தலைமையகத்தில் பணியாற்றுவோருக்கு விடுமுறை அளிப்பதாகவே சிறிலங்கா அதிபர் இந்த முடிவை எடுத்தார் என்றும், எதிர்வரும் 30ஆம் நாள் வரை கட்சித் தலைமையகம் இயங்காது எனவும், சுதந்திரக் கட்சி செயலர் பியதாச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *