மேலும்

புதிய பிரதமரை நியமிக்குமாறு பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி

(கோப்புப்படம்)

புதிய பிரதமரை நியமிக்குமாறு எதிர்வரும் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 13 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் பின்னர், தகவல் வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “ தற்போது பிரதமராகச் செயற்படும், மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை சிறிலங்கா அதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்றும், புதியதொரு பிரதமரை நியமிக்குமாறும், நாடாளுமன்றத்தில் வரும் 05ஆம் நாள் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றுமாறும், அதற்கமைய புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.” என்று கூறினார்.

சம்பந்தனின் கோரிக்கை நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் இரண்டு முறை 122 உறுப்பினர்களின் ஆதரவுடன், நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதையும், 122 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், இந்தச் சந்திப்பின் போது, இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

அதனை ஏற்றுக் கொண்டு, புதிய பிரதமரை நியமிக்குமாறும் அவர் சிறிலங்கா அதிபரிடம் கோரினார்.

ஆனால் அதனை நிராகரித்த சிறிலங்கா அதிபர், வரும் 05 ஆம் நாள் இலத்திரனியல் வாக்கெடுப்பு மூலம், புதிய பிரேரணையை நிறைவேற்றினால் தான் ஏற்றுக் கொள்வேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ரணிலை பிரதமராக  நியமிக்கமாட்டேன்

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு கோரினால் அதனைத் தான் ஏற்கப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியாத நிலை காரணமாகவே அவரை நீக்கியதாகவும், எனவே அவரை மீண்டும் நியமிக்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், எதிர்ப்பு வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை அல்ல

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வரும் 5ஆம் நாள், புதிதாக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றைய சந்திப்பின் போது, கூறியதாக சந்திப்புக்குப் பின்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிவமோகன் கூறியிருந்தார்.

எனினும், இதனை நிராகரித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“இது புதிய நம்பிக்கையில்லா பிரேரணை அல்ல. சபையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபரைக் கோரும் வகையில், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையே வரும் 5ஆம் நாள் வாக்கெடுப்புக்கு விடப்படும்” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அரசியல் கைதிகள் குறித்து திங்களன்று பேச்சு

நாளை மறுநாள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றைய சந்திப்பின் போது, அழைப்பு  விடுத்துள்ளார்.

நேற்றைய சந்திப்பில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினையை கூட்டமைப்பு உறுப்பினர்கள் எழுப்பிய போதே, இதற்கான பொறிமுறை பற்றி நாளை மறுநாள் டிசெம்பர் 3ஆம் நாள் பேசி முடிவெடுக்கலாம் என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் சட்டமா அதிபரும் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *