நிச்சயமாக உச்சநீதிமன்றம் செல்வோம் – மங்கள சமரவீர
நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நிச்சயமாக நாங்கள் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு அலரி மாளிகையில், நடந்த கூட்டத்துக்குப் பின்னர், ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு தகவல் வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“நிச்சயம் நாங்கள் நீதிமன்றத்தில் இதனைச் சவாலுக்கு உட்படுத்துவோம்.
இதன் விளைவாக சிறிலங்கா அதிபருக்கு எதிராக ஒரு குற்றவியல் பிரேரணையையும் கொண்டு வருவோம். ஏனென்றால் அவரால் நாட்டுக்கு ஆபத்து. நாட்டின் ஜனநாயக மரபுகளுக்கு ஆபத்து உள்ளது.
எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கிறது.
ஆனால், இது அப்பட்டமான அரசியலமைப்பு மீறல். எனவே, இந்தக் கலைப்புக்கு எதிராக சவால் விட வேண்டிய தேவை உள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.