மேலும்

புதுடெல்லி பயணமானார் ரணில் – சதித் திட்டம் குறித்து பேசுவார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார்.  இந்தப் பயணத்தின் போது, அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சிறிலங்கா பிரதமர் சந்திக்கவுள்ளார்.

சிறிலங்கா அதிபரைக் கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக வெளியாகி தகவல்கள் குறித்தும், இந்திய அதிகாரிகளுடன் சிறிலங்கா பிரதமர் பேச்சுக்களை நடத்தவுள்ளனர் என்று அவரது செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சதித் திட்டத்தில் இந்திய புலனாய்வுப் பிரிவு தொடர்புபட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்றில் செய்தி வெளியான நிலையிலேயே, இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு நடத்தவுள்ளார்.

இதற்காக இந்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரக் கேட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் செயலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, மலிக் சமரவிக்ரம, அர்ஜூன ரணதுங்க ஆகியோரும், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இன்று மாலை புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.

அங்கு சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா, இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிலங்கா பிரதமர் புதுடெல்லிக்கு மேற்கொள்ளும் 5 ஆவது அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *