அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க, சிறிலங்கா அதிபருடன், வெளிவிவாகர அமைச்சர் திலக் மாரப்பனவும், நியூயோர்க் சென்றுள்ளார்.
இதன்போதே, கடந்த 24ஆம் நாள் மாலை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாரை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரண்டு நாடுகளுக்கிடையிலான பலமான உறவுகளை மீள உறுதிப்படுத்தும் வகையிலும், சுதந்திரமான, திறந்த, சட்டத்தின் அடிப்படையிலான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அர்ப்பணிப்பை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இந்தச் சந்திப்பு அமைந்ததாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.