தமிழர் தாயகத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள்
ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபனின், 31ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து, சாவைத் தழுவிய நல்லூர் கந்தன் ஆலய வடக்கு வீதியில், இன்று காலை 10.48 மணியளவில் மௌனவணக்கம் செலுத்தப்பட்டது.
அதையடுத்து. நல்லூர் கந்தன் ஆலய பின் வீதியில் உள்ள திலீபன் நினைவிடத்தில், மாவீரர்களின் பெற்றோர்களால், பொதுச்சுடர், ஈகச் சுடர் என்பன ஏற்றப்பட்டன.
தொடர்ந்து திலீபன் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்திலும், அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட தமிழர் தாயகம் எங்கும் நேற்று பல்வேறு இடங்களில் தியாகதீபம் திலீபன் உருவப்படம் வைக்கப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.