நீரிழப்பினால் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசம்
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் நான்கு பேர் சனிக்கிழமை அனுராதபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்தே இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளை, ஏனைய நான்கு அரசியல் கைதிகளும், சி்றைச்சாலையில் தொடர்ந்தும், உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அனுராதபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அரசியல் கைதிகள் நீரிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை, குறுகிய கால புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவிக்கக் கோரியே அரசியல் கைதிகள் 8 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறவுள்ளது.