மேலும்

மாலைதீவில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் வெற்றி – கொழும்பிலும் வாக்களிப்பு

மாலைதீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட இப்ராகிம் மொகமட் சோலி 58.3 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று நடந்த தேர்தலில் 92 வீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், மாலைதீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் மொகமட் சோலி, 1,33,808 வாக்குகளையும், மாலைதீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யமீன் 95,526 வாக்குகளையும் பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சீன சார்புடைய அப்துல்லா யமீன் ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மீது கடும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையிலேயே அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

மாலைதீவு அதிபர் தேர்தலை இந்தியாவும், சீனாவும் உன்னிப்பாக அவதானித்து வந்தன.

இதற்கிடையே மாலைதீவு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று கொழும்பிலும் இடம்பெற்றிருந்தது.

சிறிலங்காவில் 2,700 மாலைதீவு நாட்டு வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 1,560 பேர் மாத்திரம் நேற்று வாக்களித்தனர்.

இவர்களுக்காக மாலைதீவு தூதரகத்தில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. காலை தொடக்கம் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *