அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
இன்று முற்பகல் 10 மணியளவில், வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த பேரணி, வவுனியா, மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது. இதையடுத்து, அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தினால் ஏ-9 நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.