அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாடு திரும்பினார்
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, முற்கூட்டிய தகவல்கள் எதையும் வெளியிடாமல், திடீரென கடந்த 10ஆம் நாள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
அதன் பின்னரே அவர், மெக்சிகோவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.
அத்துடன் அமைச்சரவையை அவசரமாக கூட்டிய சிறிலங்கா அதிபர், அட்மிரல் விஜேகுணரத்னவைக் கைது செய்வதற்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
இதன்பின்னர், அட்மிரல் விஜேகுணரத்னவைக் கைது செய்யும் திட்டம் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் இல்லை என்றும், அதனை அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரின் குடும்பத்தினர் நேற்று ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளின் தூதரகங்களிடம், இந்த வழக்கில் சிறிலங்கா அதிபர் தலையிடுவதாகவும், நீதித்துறையை சுதந்திரமாகச் செயற்பட விடுமாறு சிறிலங்கா அதிபரிடம் கூறுமாறும், கோரி மனுக்களை கையளித்திருந்தனர்.
இந்தச்சூழ்நிலையில், மெக்சிகோவுக்கு சென்றிருந்த அட்மிரல் விஜேகுணரத்ன இன்று அதிகாலை 1.10 மணியளவில் டுபாயில் இருந்து கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் நாடு திரும்பினார்.
எனினும், அவரை எப்போது, விசாரணைக்கு அழைப்பது என்பது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்னமும் முடிவு செய்யவில்லை.