இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களை விரைவுபடுத்த சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இணக்கம்
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சிறிலங்காவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
புதுடெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவின் உதவியுடன் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும், அபிவிருத்தி, ஒத்துழைப்புத் திட்டங்களால் மக்களுக்கு கிடைத்துள்ள நன்மைகள் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டு நாடுகளினதும் பொருளாதாரங்கள் மற்றும் மக்களுக்கு நன்மையளிக்கும் இத்தகைய கூட்டு பொருளாதார திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தவும், சிறிலங்கா தரப்புக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவை வரவேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற தொடர்புகள் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளினதும், மாகாண மட்ட சட்டமன்றங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் புதிய முயற்சிகள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையையும், மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.