மேலும்

அட்மிரல் விஜேகுணரத்னவின் மெக்சிகோ பயணத்துக்கு ‘பச்சைக்கொடி’ காண்பித்த சிறிலங்கா அதிபர்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தமக்கு வாக்குமூலம் அளிக்கத் தவறியுள்ளார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப் போவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினல் முன்னிலையாகாமல், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று அதிகாலை மெக்சிகோவுக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் தெரிவித்த பின்னரே அவர், மெக்சிகோவுக்கு புறப்பட்டுச் சென்றதாகவும், மாற்று நாள் ஒன்றை அவர் கோரியிருப்பதாகவும், அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இன்று அவர் விசாரணைக்கு முன்னிலையாகாவிடின், நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துவோம் என்றும், அவர் நாடு திரும்பும் போது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர்மட்டம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, மெக்சிகோவுக்கு அதிகாரபூர்வ பயணமாகவே அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சென்றுள்ளார் என்று பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின், பேச்சாளர், ருவான் பிரேமவீர தெரிவித்துள்ளார்.

“மெக்சிகோவின் 208ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்கவே அவர் அங்கு சென்றுள்ளார். மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சல்வடோர் சியென்பியூகோஸ் சிபேடாவின் அழைப்பின் பேரில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

வரும் செப்ரெம்பர் 19 ஆம் நாளே அவர் நாடு திரும்புவார்.

தனது பயணம் தொடர்பாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தி, சாட்சியமளிப்பதற்கு மாற்று நாள் ஒன்றைக் கோரியிருக்கிறார்.” என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அட்மில் விஜேகுணரத்னவின் இந்தப் பயணம் குறித்து, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்கூட்டியே தெரியும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *