மேலும்

அரசியலில் நுழையும் வாய்ப்பை மறுக்கிறார் சங்கக்கார

தாம் அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகியுள்ள வதந்திகளை சிறிலங்கா துடுப்பாட்ட  அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகும் செய்திகளை குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாகவும், தன்னிடம் அவர் தொலைபேசி மூலம் இதனைத் தெரிவித்தார் என்றும் மூத்த விளையாட்டு ஊடகவியலாளர் ரஞ்சன் பரணவிதான கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

தற்போது, இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையில் நடந்து வரும் துடுப்பாட்ட போட்டிகளின் வர்ணனையாளராக பணியாற்றுவதற்காக குமார் சங்கக்கார லண்டனில் தங்கியிருக்கிறார்.

எனினும், இதுபற்றி அவர் தனது அதிகாரபூர்வ சமூக ஊடகங்களில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, குமார் சங்கக்காரவை ஐதேகவின் அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளுக்கு, பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் மேலும் ஊக்கமளிப்பதாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் இம்ரான்கான் அங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்கவுள்ள நிலையில் சங்கக்காரவுக்கும் அது நம்பிக்கையூட்டும் நிகழ்வாக அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

முன்னதாக, சிறிலங்கா துடுப்பாட்ட அணியில் இருந்து ஓய்வுபெற்ற போது, பிரித்தானியாவுக்கான தூதுவராக அவரை நியமிக்க தற்போதைய அரசாங்கம் முன்வந்திருந்தது. எனினும் சங்கக்கார அந்தப் பதவியை ஏற்க மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *